அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் தீயணைப்பு வீரர்களின் முயற்சிகளை மீறி பெரிய காட்டுத் தீ பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அவுஸ்திரேலியா தலைநகர் கான்பெரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை அவசர கால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
2003-இல் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீக்குப் பின்னர் அவுஸ்திரேலிய தலைநகரப் பிராந்தியத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வார இறுதியில் ஏற்படக்கூடிய ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது என அவுஸ்திரேலிய தலைநகர பிராந்தியத்தின் முதலமைச்சர் ஆண்ட்ரூ பார் தெரிவித்துள்ளார்.
கான்பெராவின் எல்லை அருகே உள்ள நியூசவுத்வேல்ஸின் 185 சதுர கி.மீ. பிரதேசங்களில் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் தீ பற்றி எரிந்து வருகிறது.
இது நியூசவுத்வேல்ஸ் பிராந்தியத்தின் பரப்பளவில் கிட்டத்தட்ட 8 சதவீத அளவாகும்.
இந்த தீ பரவல் கணிக்க முடியாதளவு பரவக்கூடும். இது கட்டுப்பாடற்றதாக மாறக்கூடும் என முதலமைச்சர் ஆண்ட்ரூ பார் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடும் வெப்பம், பலத்த காற்று மற்றும் வறட்சியான நிலப்பரப்பு ஆகியவற்றின் கலவையானது கான்பெராவின் தெற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
அவுஸ்திரேலிய பாராளுமன்றம் கான்பராவில் அமைந்துள்ளது. இங்கு பல அரசு மற்றும் சுயாதீன நிறுவனங்கள் மற்றும் தேசிய அருங்காட்சியகங்கள் என்பன அமைந்துள்ளன.
2003 கான்பராவில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் இறந்தனர். கிட்டத்தட்ட 500 வீடுகள் தீயில் கருகி அழிந்தன.
இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஆபத்தான நிலையை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை அடுத்த 72 மணி நேரங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை அமுலில் உள்ளதால் எந்நேரமும் அவசர வெளியேற்றங்களுக்கு உத்தரவிட முடியும். போக்குவரத்து வீதிகளை மூடுவதற்கும் தனியார் சொத்துக்களைக் கையாள்வதற்கும் அசவர கால நிலையின் கீழ் அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் வழியாக இந்த வார இறுதியில் வெப்ப அலை பரவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் தற்போது சுமார் 80 இற்கு மேற்பட்ட இடங்களில் கடுமையான காட்டுத் தீ எரிந்து வருகிறது.
அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் புகை காரணமாக அண்டை நாடான நியூசிலாந்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு பனிப்பாறைகள் தூசிப் படிமங்களால் பழுப்பு நிறமாக மாறியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் பரவியுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்நாடு தொடர்ந்தும் போராடி வருகிறது.
இந்தக் காட்டுத் தீயால் செப்டம்பர் முதல் இதுவரை 33 பேர் இறந்துள்ளனர். சுமார் 100 கோடி விலங்குகள் கருகிப் பலியாகின. 11.7 மில்லியன் ஹெக்டேயர் (117,000 சதுர கி.மீ) இறக்கும் அதிகமான காடுகள் எரிந்து நாசமாயின. அத்துடன் சுமார் 2,500 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை வரையான நிலவரப்படி நியூசவுத்வேல் மாநிலத்தில் 58 இடங்களிலும் விக்டோரியாவில் 20 இடங்களிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் 22 இடங்களிலும் தீ பற்றி எரிந்து வருகிறது.
நியூசவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வெப்பநிலை இன்று வெள்ளிக்கிழமை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.